சனல் நாலு தொலைக்காட்சி மீண்டும் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது. அது இலங்கை அரச புலனாய்வுத் துறையின் தலைவருக்கும் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக சந்தேகங்களை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் கிழக்கு மாகாணத்தில் ராஜபக்சக்களின் விசுவாசியாகக் காணப்படும் பிள்ளையானுக்கும் அதில் சம்பந்தம் இருப்பதாக அக்காணொளியில் கூறப்படுகிறது.
ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் கொண்ட சக்திகள் இருப்பதாக கொழும்பில் உள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் அடிக்கடி கூறி வருகிறார். குண்டு வெடிப்பு தொடர்பாக அனைத்துலக விசாரணை தேவை என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் அனைத்துலக விசாரணை வேண்டும் என்று கேட்கிறார். அதாவது இச்சிறிய தீவில் தமிழர்களும் அனைத்துலக விசாரணையைக் கேட்கிறார்கள். சிங்களவர்களும் கேட்கிறார்கள். இந்நிலையில் சனல் நாலு வெளியிட்ட புதிய வீடியோ எவ்வாறான தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்படுத்தப் போகின்றது?
அந்த வீடியோ கூற வரும் விடயத்தை ஏற்கனவே கர்தினால் மல்கம் ரஞ்சித் மறைமுகமாகத் தெரிவித்துவிட்டார். தொடர்ச்சியாக அரசியல் கட்டுரைகளை வாசிப்பவர்களுக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் என்ன கூற வருகிறார் என்பது விளங்கும்.அசாத் மௌலானா தெரிவிக்கும் தகவல்கள் ஏற்கனவே வெளித் தெரிய வந்தவைதான். எனவே இந்த விடயத்தில் சனல் நாலு புதிதாக எதையும் கூறவில்லை. ஆனால் ஓர் அனைத்துலக ஊடகத்தில் இந்த விடயம் பகிரங்கமாக வெளிவந்திருப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவாக ராஜபக்சங்களுக்கு எதிராக அமையும். ராஜபக்சக்கள் உள்நாட்டில் முஸ்லிம் மக்களின் ஆதரவுத் தளத்தை பெருமளவுக்கு இழக்க நேரிடும். அதே சமயம் அனைத்துலக அளவிலும் அவர்களுடைய பெயர் மேலும் கெடும்.
ஏற்கனவே அவர்களுடைய பெயர் கெட்டுத்தான் உள்ளது.கடந்த ஆண்டு நடந்த சிங்கள மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களின் போது ராஜபக்சக்கள் ஆட்சி அதிகாரங்களில் இருந்து துரத்தப்பட்டார்கள். அப்பொழுது உள்நாட்டில் அவர்களுடைய பெயர் மோசமாகக் கெட்டுவிட்டது. கனடா இரண்டு மூத்த ராஜபக்சக்களுக்கு எதிராக தடைகளை விதித்திருந்தது. ஏறக்குறைய அதே காலப்பகுதியில் அமெரிக்கா நிறைவேற்றிய ஒரு சட்டத்தின் பிரகாரம் போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிராக வழக்குத் தொடுக்கக்கூடிய நிலைமைகள் முன்னரை விட அதிகரித்துள்ளன. இதன் விளைவாக மூத்த ராஜபக்சக்களுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மேலும் பிரகாசமாகியுள்ளன.
இவை தவிர ஐநாவின் தீர்மானம் ஒன்றின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் தொடர்ந்து இயங்குகின்றது. அதில் சேகரிக்கப்படும் சான்றுகளும் சாட்சிகளும் ராஜபக்சக்களுக்கு எதிரானவர்களாகவே காணப்படும். எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால், ராஜபக்சக்கள் அனைத்துலக அளவில் ஏற்கனவே அப கீர்த்திக்கு உள்ளாகியிருக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்கக் கண்டத்தில் இரண்டு மூத்த ராஜபக்சங்களுக்கு நெருக்கடியும் ஆபத்தும் அதிகரித்து வருகின்றன.
ராஜபக்சகளின் பெயர் ஏற்கனவே வெளியுலகில் கெட்டுப் போய்விட்டது. உள்நாட்டிலும் கெட்டுப் போய்விட்டது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சனல் நாலு வெளியிடப்பட்ட வீடியோ ராஜபக்சக்களின் பெயரை மேலும் கெடுக்கக் கூடியது. அதன் விளைவு எவ்வாறு அமையும்?
ராஜபக்சக்கள் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமது குடும்பத்தைச் சேர்ந்த யாரையாவது களமிறக்குவதற்கு மேலும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும். ஏற்கனவே அவர்கள் அதுகுறித்துச் சிந்தித்திருப்பதாகத் தெரிகிறது. பெரும்பாலும் ரணில் விக்கிரமசிங்க வைத்தான் அவர்கள் பின்னிருந்து ஆதரிக்கலாம் போல் தெரிகிறது. சனல் நாலு வீடியோவானது ராஜபக்சக்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அவர்களை மேலும் பின்வாங்க வைக்கக் கூடியது.
ராஜபக்சக்களின் அடுத்த வாரிசாக நாமல் ராஜபக்ச வளர்க்கப்படுகிறார்.அவர் பெரும்பாலும் எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடக் கூடும். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் அநேகமாக ராஜபக்சக்கள் போட்டியிட மாட்டார்கள் என்பது ஏற்கனவே ஊகிக்கப்பட்ட ஒன்று. நாமல் ராஜபக்ஷ அதற்கு பின் வரக்கூடிய தேர்தல்களைத்தான் குறி வைப்பார். ஆதனால் நாமல் ராஜபக்சவைப் பலப்படுத்தும் வரையிலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ராஜபக்ச குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியை நீக்கும் வரையிலும், அல்லது அந்த அபகீர்த்தி காலப்போக்கில் படிப்படியாக நீங்கும் வரையிலும், அல்லது சிங்கள மக்கள் கடந்த ஆண்டு நடந்தவற்றை மறக்கும் வரையிலும், இடைப்பட்ட காலத்துக்கு ராஜபக்சக்களின் பினாமியாக ரணிலை வைத்திருப்பதற்கு அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு விட்டார்கள். ரணிலைத் தவிர வேறு பொருத்தமான ஆள் அவர்களுக்குக் கிடையாது. எனவே சனல் நாலு வீடியோவின் உடனடி விளைவு என்பது ராஜபக்சக்கள் ரணிலுக்கு இடைஞ்சலாக செயற்படுவதைத் தடுக்கும் என்பதுதான். அதாவது அதை அதன் தர்க்கபூர்வ விளைவைக் கருதிக் கூறின்,அது ரணிலுக்குச் சாதகமாக அமையும்.ரணில் ராஜபக்சக்களைக் குறித்த பயமின்றி அடுத்த தேர்தலில் போட்டியிடலாம்.
எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைக்கும் மேற்கத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரல் ஒன்று அங்கு உண்டா என்ற சந்தேகம் உண்டு. ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை ரணிலை தொடர்ந்தும் பதவியில் வைத்திருக்கவே மேற்கு நாடுகள் விரும்புகின்றன. பன்னாட்டு நாணய நிதியமும் விரும்புகின்றது. எனவே ரணிலுக்கு ராஜபக்சக்கள் இடைஞ்சலாக எழுவதை சனல் நாலு வீடியோ ஓரளவுக்குத் தடுக்கும். மேலும் ராஜபக்ஷர்களுக்கு அனைத்துலக அளவில் உள்ள வரையறைகளையும் அது உணர்த்தும்.
ஆனால் அது நீண்ட கால நோக்கில் ராஜபக்சக்களின் எழுச்சியை நிரந்தரமாகத் தடுக்காது. ஏனெனில் ரணில் அடுத்த ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவாராக இருந்தால், அல்லது யார் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும், அதில் வென்ற கட்சியானது அடுத்த ஆண்டு பெரும்பாலும் தேர்தல்களை வைக்கும். அதன் மூலம் தனது வெற்றியைப் பலப்படுத்த எத்தனிக்கும்.ஆயின்,ராஜபக்சக்களின் பதிலியாக போட்டியிட்டு ரணில் வென்றால் அது ராஜபக்சக்களின் வெற்றியுந்தானே?
சனல் நாலு வீடியோவானது முஸ்லிம்களை ராஜபக்சங்களுக்கு எதிராகத் திருப்பக்கூடும். ஆனால் அது மேற்கு நாடுகள் மற்றும் மேற்கில் பலமாக காணப்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் போன்றவற்றின் நாட்டுக்கு எதிரான சதி வேலையாக, அல்லது யுத்த வெற்றிக்கு எதிரான ஒரு நகர்வாகத்தான் சிங்கள மக்கள் மத்தியில் காட்டப்படும். எனவே அது அதன் தக்கபூர்வ விளைவாக உள்நாட்டில் ராஜபக்சகளின் மீது அனுதாபத்தை ஏற்படுத்தவும் கூடும். அந்த அனுதாபம் அடுத்தடுத்த ஆண்டு வரக்கூடிய தேர்தல்களில் எதிரொலிக்கலாம்.
எனவே இப்போதுள்ள நிலைமைகளின்படி சனல் நாலு வீடியோவின் விளைவு என்பது உலக அளவில் ராஜபக்சக்களைப் பலவீனப்படுத்தும். அதன் விளைவாக ரணில் விக்கிரமசிங்க தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும். அதாவது அனைத்துலக அளவில் ராஜபக்சக்கள் மேலும் பலவீனமடைவார்கள். ஆனால் அவர்கள் ரணிலின் பின் பதுங்கிக் கொண்டு தம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும் கடந்த ஆண்டு அதுதான் நடந்தது.கடந்த ஆண்டு இனவாதம் ஒப்பீட்டளவில் பதுங்கிய ஓராண்டு எனலாம். ஆனால் இந்த ஆண்டு ஒப்பீட்டளவில் அவர்கள் தற்காப்பு நிலைக்கு வந்து விட்டார்கள். ரணிலின் மறைவில் தம்மைப் பலப்படுத்திக் கொண்ட பின் ராஜபக்சக்கள் மீண்டும் மேலெழ முடியும். அவர்கள் அவ்வாறு மேலும் முன்னேறுவதைத் தடுப்பது சனல் நாலு வீடியோவின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம்.
அதாவது ராஜபக்சக்களுக்குப் பாதகமாக இருப்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக இருக்கின்றது. ஆனால் ராஜபக்சக்களின் பினாமியாகத்தான் அவர் அடுத்த ஆண்டு தேர்தலில் நிற்கக் கூடும். எப்படியிருக்கிறது இலங்கையின் அரசியல் சமன்பாடு? அதனால்தான் மகிந்த இலங்கைத் தீவை ஆசியாவின் அதிசயம் என்று அழைக்க முற்பட்டவரா ?