நடராசா லோகதயாளன்.
கடற்றொழில் அமைச்சர் தனது ஆதரவாளர்களை வைத்தே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடாத்தியதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசத்தின் முன்னாள் தலைவரும் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச செயலாளருமான அ.அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த ஆண்டு டிசம்பர் மதம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தின் போது ,கடற்தொழில் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் இலங்கையின் பெரும்பாலான பாராளுமனற உறுப்பினர்கள், குறிப்பாக வடக்கு மாகாணத்தை பிரநிதித்துவ படுத்தும் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து கடற்தொழிலாளர்களின் பிரச்சனையை எடுத்து கூறினர்.
வடக்கு கடற்தொழிலாளர்கள் சமூகத்திற்கு, இந்திய மீனவர்களின் பிரச்சனை ஒரு பிரச்னையாக இருப்பதோடு , உள்ளூர் இழுவை படகுகளால் ஏற்படுகின்ற பாதிப்புகள், சுருக்கு வலை மீன்பிடி , மற்றும் அனுமதியற்ற கடலட்டை பண்ணைகள் தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்காமல் வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளை இந்திய மீனவர்களின் பிரச்சனையோடு மட்டும் முடக்கி விடுவது வேதனையளிக்கின்றது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு யாழ் மாவட்டத்தை சேர்ந்த கடற்தொகிலாளர்கள் சங்க சமாசத்தின் பிரதிநிதிகள் அழைக்கப்படாமல் அரசியல் பின்புலத்தோடு கலந்து கொண்டவர்கள். அதில் ஒருவரை தவிர ஏனைய அனைவரும் கிராமப்புறத்தில் கூட ஒரு சங்கத்திலும் இல்லை, சங்கத்தில் இல்லாதவர்கள் கடல்தொழில் அமைச்சரின் ஆதரவாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள்தான் அந்த கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலம் மீனவர்களின் பிரச்சனைகள் மழுங்கடிக்கப்படுகின்றது.
புதிதாக கொண்டுவரப்படவுள்ள புதிய கடற்தொழிலாளர் திருத்த சட்டம் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்பதால் அதை நிராகரித்து அதற்கு எதிராக இலங்கை முழுவதும் கையெழுத்துக்கள் பெற தீர்மானித்துள்ள நிலையில், அந்த நடவடிக்கை ஊர்காவற்றுறை பொது சந்தை முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை, அரசியல் நோக்கத்தோடு மீனவர்கள் பிரச்சனையை வடக்கில் மூடி மறைத்து சீனாவுக்கு கடலை விற்பதற்கு துணை போகின்றார்கள். சீனாவினுடைய பணத்திற்கு அடிமையாகி தான் இந்த செயற்பாடுகள் நடக்கின்றது. சீனாவின் பணமோ நிவாரனங்களோ தேவையில்லை. சுதந்திரமாக எங்களுடைய கடலில் தொழிலை மேற்கொள்ள வேண்டும். மக்கள் விரும்பாத அபிவிருத்திகள் தேவையவற்றவை . வடக்கை பிரதிநிதித்துவ படுத்தும் கடல் தொழில் அமைச்சர் தமிழராக இருந்தும் வடக்கு மீனவர்கள் பல சவால்களை தொடரந்தும் எதிர்கொள்ளுகின்றனர்.
இனி வரும் காலங்களிலாவது கடற்றொழிலார்களின் பிரச்சனைகள் தொடர்பாக மீனவ பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய பிரச்சனைகள் பிரதேச ரீதியாக கேட்டறிந்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.