கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் சபாநாயகரும், இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதியுமான டப்ளியூ.ஜே.எம். லொக்கு பண்டார நேற்று முன்தினம் காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் கொட்டிகாவத்தை பொதுமயானத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றன.
கொவிட்19 தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்த முதலாவது சிரேஷ்ட அரசியல் தலைவராக விளங்குகின்றார் இவர். இவரது மரணம் பல்வேறு மட்டங்களதும் அவதானத்தைப் பெற்றுள்ளது.
1941 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி ஹப்புத்தளையில் பிறந்த டப்ளியூ.ஜே.எம். லொக்கு பண்டார பேராதனை பல்கலைக்கழகப் பட்டதாரி என்பதோடு, ஒரு சட்டத்தரணியுமாவார். இவர் சட்ட வரைஞர் திணைக்களத்தில் உதவி சட்ட வரைஞராகக் கடமையாற்றியுள்ளார்.