கொழும்பிலிருந்து ராஜபுத்ரன்
உலகெங்கும் தற்போதைய கோவிட்-19 தொற்றின் மோசமாக தாக்கத்தால் மக்களும் அரசாங்கங்களும் தடுமாறிக்கொண்டிருக்கும் போது சில நாடுகளில் இந்த நோய்த் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலாமல் உள்ளது. இதனால் ‘சமூக முடக்கம்’ போன்றவற்றை விதித்தே மக்களை அவதானமாகக் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியுமென்றால், அது எக்காலத்திலும் கைகொடுக்கப் போவதில்லை என்றே பல நாடுகளும் கருதுகின்றன.
இது போன்றே சமூக முடக்கம் என்ற ஆயுதத்தை இலங்கையிலும் அரசாங்கம் உபயோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இலங்கையில் கொரோனா நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொதுமக்களின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை என்பதே பொதுவான ஒரு கருத்தாக உள்ளது.
மேலும்,கொரோனா வைரஸ் தொற்று என்பது மாதக்கணக்கிலா அல்லது வருடக்கணக்கிலா உலகத்தை விட்டு முற்றாக நீங்குமென்பதை எவருமே வரையறுத்துக் கூறி விட முடியாதிருக்கின்றது. உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த சர்வதேச மருத்துவ நிபுணர்களாலும் அதனை உறுதியாகக் கூறி விட முடியாதிருக்கின்றது.
ஆனால் மருத்துவ அறிவியலை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. உலக வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கும் போது, பலவிதமான வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகள் வெற்றிகரமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மருத்துவ உலகம் இன்று ஈட்டியிருக்கும் சாதனை மிகப் பெரியது. இந்த விடயத்தில் முழுமையான வெற்றியை ஈட்டுவதற்கு மேலும் சில காலம் செல்லக் கூடுமென்பதே நம்பிக்கையாகும்.
அதுவரை நாம் ஒவ்வொருவரும் எமது சுயபாதுகாப்பையும், எம்மைச் சுற்றியுள்ளோரின் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு கொரோனா தொற்றைத் தவிர்த்துக் கொள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதே உகந்ததாகும்.
கொவிட் தொற்று பரவுதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு நாடெங்கும் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்து வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு பத்து மணிக்கு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடைமுறையானது தொடர்ந்து பத்து தினங்களுக்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை அடிப்படை சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பேணியவாறு மிக அவதானமாக நடந்து கொள்ளுமாறும், சமூக இடைவெளியை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் மருத்துவ சுகாதாரத் துறையினர் தொடர்ச்சியாகக் கூறி வந்த போதிலும், மக்களில் ஏராளமானோர் அந்த அறிவுரைகளை உதாசீனம் செய்தவாறே வந்தனர். அரசாங்கத்தின் அறிவிப்பை பொருட்படுத்தாமல் பெருமளவானோர் நடந்து கொண்டனர்.
ஒன்றுகூடல்கள் மற்றும் விழாக்கள் பலரது வீடுகளில் இரகசியமாக நடந்தேறின. வழிபாட்டுத் தலங்கள் சிலவற்றில் சமூக இடைவெளியை மறந்தவாறு பலரும் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட்டனர். பல வீடுகளில் திருமண வைபவங்கள், பிறந்தநாள் நிகழ்வுகள் போன்றவையெல்லாம் நடந்தேறின. முகக்கவசத்தை தாடைக்குக் கீழே இறக்கி விட்டவாறு பலரும் அநாயாசமாக பொது இடங்களில் நடமாடினர். வளிச்சீராக்கி (எயார் கண்டிஷன்) பொருத்தப்பட்ட பொதுப்போக்குவரத்து சாதனங்களில் மக்கள் பயணம் செய்ததைக் காண முடிந்தது.
இவற்றின் விளைவாக நாளாந்தம் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது பல்கிப் பெருகியது. அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போனது. மருத்துவமனைகளில் கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக இடநெருக்கடியும் ஏற்பட்டது. வைத்தியசாலைகளில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு உள்ளானதால் நிலைமை மோசமடைந்தது. வைத்தியர்கள் ஒருசிலர் உட்பட மருத்துவ சேவையினர் பலர் உயிரிழந்தும் விட்டனர்.
இவ்வாறான பல்வேறு நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டு சென்றதன் காரணமாக மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு இப்போதைய தனிமைப்படுத்தல் ஊரடங்கை அரசாங்கம் கொண்டு வர வேண்டியிருந்தது. நாட்டின் மதத்தலைவர்கள், மருத்துவ சுகாதாரத் துறையினர் மற்றும் பல்வேறான பொதுநல அமைப்புகளின் ஆலோசனையை முன்னிட்டு மக்கள் நடமாட்டத்தையும், ஒன்றுகூடல்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே தற்போதைய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இவ்வாறு பார்க்கும் போது, இலங்கையில் முன்னர் உருவெடுத்த கொவிட் அலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் அவதானமாக செயற்பட்டிருப்பின் இவ்வாறு மீண்டுமொரு அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. கொரோனா பரவல் இனிமேல் மீண்டும் தலைதூக்கப் போவதில்லையென்ற விவேகமற்ற எண்ணத்தில் மக்களில் ஏராளமானோர் நடந்து கொண்டதன் விளைவாகவே எமது நாடு மீண்டுமொரு அலையை சந்திக்கும் நிலைமை உண்டானது.
கொரோனா கட்டுப்பாட்டுக்கான பிரிவினரும் மருத்துவ சுகாதாரத் துறையினரும் ஊடகங்கள் வாயிலாக எவ்வாறான அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் கூறி வந்த போதிலும், மக்களில் பலர் அதனையெல்லாம் பொருட்படுத்துவதில்லையென்பது நன்றாகவே தெரிந்து விட்டது. அறிவுரைகளாலும், ஆலோசனைகளாலும் பயன் கிடைக்கப் போவதில்லை. ‘லொக் டவுண்’ போன்ற கண்டிப்பான உத்தரவுகள் மூலமாகவே மக்களை கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியுமென்பதுதான் உண்மையானால், அது ஆரோக்கியமானதல்ல.
இலங்கை மக்கள் முதலில் நிலைமையின் பாரதூரத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் என்பது ஒருவரில் இருந்து மற்றவருக்கு எவ்வாறு இலகுவாகப் பரவுகின்றதென்பதை ஒவ்வொருவரும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு ஒவ்வொருவரும் தம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறான பொறுப்புணர்வான செயற்பாடுகளின் ஊடாகவே கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மால் மீண்டெழ முடியும் என்பதையே நாம் இந்த நேரத்தில் குறிப்பிட முடியும்