யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை மு.ப. 10.35 மணியளவில் மூன்றாவது திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் திரு. பா.பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், சித்தன்கேணி இளைஞர் முன்னேற்ற கழகத்தின் நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்ட மூன்றாவது நவீன திறன் வகுப்பறையானது (Smart Panel) அவ்வமைப்பின் சார்பில் அத்திறன் வகுப்பறையின் உருவாக்கத்திற்கு ஆரம்ப கர்த்தாவாக விளங்கிய வழக்கறிஞர் திரு.தி. அர்ச்சுனா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இத்திறன் வகுப்பறையின் நினைவுப் பலகையை வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.பொ.ரவிச்சந்திரன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்ததோடு திறன் பலகையையும் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
சித்தன்கேணி இளைஞர் முன்னேற்றக் கழகத்தின் கல்விப் பணிகளில் ஒன்றாக மாணவர்களின் நவீன கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் முகமாக இம்மூன்றாவது திறன் வகுப்பறையினை பாடசாலைக்கு அமைத்து வழங்கியுள்ளதோடு இத்திறன் வகுப்பறைக்குரிய உள்ளக வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த வலயக்கல்விப் பயணிப்பாளர். இப்பாடசாலையின் ஐந்து வகுப்புக்களையும் திறன்வகுப்பறைகளாக மாற்றும் அதிபரின் திட்டத்தை வரவேற்றுப் பேசியதோடு தற்போதைய Covid 19 சூழ்நிலையில் தொலைக்கல்வி முறையை வழங்குவதற்கு இத்திறன் வகுப்பறைகள் பேருதவியாக அமைந்திருக்கின்றன எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் சித்தன்கேணி இளைஞர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. ச.சதுர்புயன், அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.