“கனடா உதயனின் கதிரொளி தாயகத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது” பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு
காலத்தின் கட்டளையாக கனடா உதயன் பத்திரிகை உதயமானது சிரேஷ்ட ஊடகவியலாளர் இ. பாரதி தெரிவிப்பு
அண்மையில் கனடா உதயன்பத்திரிகை வெளியிட்டுள்ள இலங்கைச் சிறப்பிதழ் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வு திருநெல்வேலி காளிகோவிலடி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (05.09.2022) நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா. சண்முகலிங்கன், சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.பாரதி, ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் கௌரி முகுந்தன், வலிகிழக்கு பிரதேசசபைத் தலைவர் தி. நிரோஸ் ஆகியோர் கலந்துகொண்டு இலங்கைச் சிறப்பிதழ் பற்றியும் உதயன் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் சமூக, இலக்கிய, ஊடகப் பணிகள் குறித்தும் உரையாற்றியிருந்தார்கள்.
வெளிநாடு ஒன்றிலிருந்து தாய் நாட்டை மறவாமல் இலங்கைச் சிறப்பிதழை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியருக்கும் அவரது குழுவினருக்கும் அங்கு உரையாற்றிய அனைத்து பேச்சாளர்களாலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் கனடாவில் இருந்து சென்றிருந்த வீணை மைந்தன் கே.ரி. சண்முகராஜா உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். நிகழ்ச்சியின் இறுதியில் திருநெல்வேலி மற்றும் அதன் அயற் கிராமங்களில் உள்ள சனசமூக நிலையங்களுக்கு இலங்கைச் சிறப்பிதழின் பிரதிகள் வழங்கப்பட்டன. இலங்கைச் சிறப்பிதழ் அறிமுக நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு ஏராளமானவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஒரு பத்திரிகையின் கொள்கைப் பிரகடனமாக அதன் ஆசிரியத் தலையங்கமே அமைகிறது. ஓரு பத்திரிகை பல்வேறு தரப்பட்ட செய்திகளைப் பிரசுரித்தாலும், பல்வேறு தரப்பினரின் ஆக்கங்களைத் தாங்கி வந்தாலும் ஊடக நிறுவனத்தின் அல்லது ஆசிரிய பீடத்தின் கருத்து நிலையைப் பறைசாற்றுவதாக எப்போதுமே ஆசிரியத் தலையங்கமே விளங்குகிறது. அந்தவகையில், உதயனின் ‘கதிரோட்டம்’ என்ற ஆசிரியத் தலையங்கம் பிசிறில்லாமல் தமிழ்த்தேசிய இனத்தின் குரலாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழினத்தின் பிரச்சினைகளை ஆணித்தரமாக எடுத்துரைப்பதன் மூலம் அதன் கதிரொளி தாயகத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது தலைமை உரையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ உதயன் இலங்கைச் சிறப்பிதழ் என்று இப்போது தனியாக ஒரு சிறப்பிதழை வெளியிட்டாலும் எல்லா இதழ்களுமே இலங்கைச் சிறப்பிதழ்கள்தான். அதன் இதழ்களில் அரசியல், கலை, இலக்கியம், ஆன்மீகம் என்று பல துறைகளிலும் இலங்கையின் பிரசித்தமான பலர் எழுதி வருகிறார்கள். இலங்கை பற்றிய செய்திகளைத் தாங்கி வராத உதயன் இதழ்களே இல்லை எனலாம். வேறு செய்தி மூலங்களில் இருந்து பிரதியெடுத்துப் பிரசுரிக்காமல் உதயன் தனக்கென இலங்கையில் செய்தியாளர்களை வைத்து நம்பகமான செய்திகளையும் கட்டுரைகளையும் தந்துகொண்டிருக்கிறது.
உதயன் ஆசிரியத் தலையங்கத்தினாலோ அல்லது அரசியல் கட்டுரைகளினாலோ மாத்திரம் தமிழர் தாயகத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சவில்லை. செய்தி இருளை மாத்திரமல்ல மானுடத்தின் அவலங்களையும் இன்னல்களையும் விரட்டுகின்ற எல்லாமே வெளிச்சம் தான். அந்தவகையிலும், உதயன் தாயகத்தின் மீது தன் வெளிச்சத்தைத் தந்துகொண்டிருக்கிறது. உதயன் ஊடகப்பணி மூலம் தேடிக்கொண்ட உறவுகளைப் பயன்படுத்தி, ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் என்னும் அமைப்பின் மூலம் போரால் பாதிக்கப்பட்ட வடக்குக்கிழக்கில் மக்களின் இன்னல்களைப் போக்கும் ஏராளமான அறப்பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது.
கனடாவின் அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு பலமிக்க சமூகமாக அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் வளர்ந்து வருகிறார்கள். இதனால் கனேடிய அரசியல்வாதிகளும் ஈழத்தமிழர்களின்பால் கவனமும் கரிசனமும் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பினரையும் இணைக்கின்ற ஆரோக்கியமான ஒரு பாலமாகவும் உதயன் பணியாற்றி வருகிறது. இதன்மூலம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாகக் கனேடியர்களுக்கும் தெளிவூட்டுகின்ற ஒரு பணியை உதயன் செவ்வனே செய்துகொண்டிருக்கிறது ‘என்றும் தெரிவித்தார்.
அடுத்து உரையாற்றிய ஈழத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ‘தினக்குரல்’ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான இ. புhரதி தனது உரையில் “இலங்கைக்கு அடுத்ததாக ஈழத்தமிழர்கள் அதிகளவுக்கு வசிக்கும் நாடாகக் கனடா உள்ளது. அதனால்தான் கனடாவை இரண்டாவது தாயகம் என நாம் கருதுகின்றோம். 1980களில் ஈழத்தமிழர்கள் அதிகளவுக்குப் புலம்பெயரத் தொடங்கியபோது பெரும்பாலானவர்கள் கனடாவைத் தெரிவு செய்தமைக்குப் பல காரணங்கள் இருந்தன. இவ்வாறு அதிக தமிழர்கள் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து வந்த காலகட்டத்தில் அவர்களுக்கிடையேயான தொடர்பாடலுக்கும், தாயகச் செய்திகளை அறிந்துகொள்ளவும் ஊடகங்கள் எதுவும் இருக்கவில்லை. இன்று போல இணையத்தளங்களோ, சமூக ஊடகங்களோ அப்போது இல்லை. அந்த நிலையில்தான் காலத்தின் கட்டளையாக “உதயன்” பத்திரிகை உதயமானது என்று தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்கள் 25 வருடங்களுக்கு முன்னால் காலத்தின் கட்டளையை ஏற்று தனது சமூகக் கடமையாக உதயன் பத்திரிகையை ஆரம்பித்தார். புகலிட நாடுகளில் ஏராளமான தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவர ஆரம்பித்தபோதும் இவற்றுள் பெரும்பாலானவை நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கவில்லை. ஒரு சில வருடங்களிலேயே முடங்கிப் போய்விட்டன. ஆனால், இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் வெற்றிகரமாக உதயன் பத்திரிகையை நடாத்தி வருகிறார்.
ஆரம்பத்தில் தாயகச் செய்திகளை அறிவதற்கே புலம்பெயர்ந்த மக்களுக்கு ஊடகங்கள் தேவையாக இருந்தன. காலப்போக்கில் அந்தந்த நாட்டுச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கிடைத்தன. தமிழர்களின் வர்த்தக முயற்சிகளுக்கும் களம் அமைக்கப்பட்டது. கலை, கலாசார, மத நிகழ்வுகளும் இந்த ஊடகங்களில் இடம்பிடித்துக்கொண்டன. மின்னியல் ஊடகங்கள் பெருகியுள்ள நிலையிலும், காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் “உதயன்” பத்திரிகை வெளிவருவதால்தான் சவால்களை எதிர்கொண்டு அதனால் வெற்றிகரமாக முன்னேறிச்செல்ல முடிகின்றது.
உதயன் கனடாவில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கான பத்திரிகை மாத்திரமல்ல. அது இன்று தமிழ்கூறும் நல்லுலகெங்கும் இணையவழி சென்றடைகின்றது. தமிழகச் சிறப்பிதழ், மலேசியச் சிறப்பிதழ், இலங்கைச் சிறப்பிதழ் என்று தன் ஊடகப் பணியை விரிவாக்கிச் செல்கிறது. இதற்கு உதயனின் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் இலக்கியப் பின்புலமும் ஓர் காரணமாகும். அவர் ஒரு ஊடகவியலாளர் மாத்திரமல்ல் இலக்கிய வாதியும்கூட. தாயகத்தில் இலக்கிய உலகில் மலையன்பன் என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவர். அவரின் இந்தப் பன்முக ஆளுமை கனடா உதயனுக்குப் புகலிட தமிழ் ஊடகப் பரப்பில் தனித்துவமான அடையாளத்தை வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதயன் வார இதழின் தொடர் எழுத்தாளரும் – திருநெல்வேலி சமூகத்தில் நன்கு அறிமுகமானவருமாகிய திரு.வீணைமைந்தன் தனது உரையில் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர், தெய்வத்திரு. இராசநாயகம் அவர்களது வாரிசு ஊடகத்துறை சார்ந்த திரு. பாரதி ஆகியோர் உதயன் ஆசிரியர் மாணவப் பருவத்திலிருந்தே நன்கு அறிந்தவர்கள் என்பதை கேள்வியுற்றபோது நாம் மகிழ்வுற்றேன். எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டு புதுவை இரத்தினதுரை, சிற்பி போன்ற பல மூத்த இலக்கிய வாதிகளுடன் அறிமுகமாகி கவியரங்குகளிலும், சமூக முன்னேற்றச் செயல்பாடுகளிலும், அவர் ஈடுபட்டு வந்ததையும், அதன் நீட்சியாகக் கனடாவில் வாழ்ந்தாலும் தான் பிறந்த மண்ணுக்கும் – தாயகத்தின் பிற பகுதிகளின் வளர்ச்சி, மாணவ சமூகத்தினருக்குத் தேவையான உதவிகளை அமைப்பு ரீதியாக உதவி வருவதையும், ஈழத்து எழுத்தாளர்களை உலகலாளவிய ரீதியில் அறிமுகப்படுத்தி, அவர்களது எழுத்தாற்றலை வெளிப்படுத்தி வரும் உன்னதமான இன – மொழிப் பற்றையும் தான் நேரடியாக கனடாவில் நெருக்கமாக இருந்து அவதானித்து வருகின்றேன்’ என்றார்