அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமருக்கு, சிட்னியில் அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், இரு நாட்டு வணிகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொடர்பாக பணிக்குழு அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆஸ்திரேலியாவில் கோயில்கள் மீது நடந்த தாக்குதல்கள் குறித்து ஆலோசித்ததாக கூறிய பிரதமர் மோடி, பிரிவினைவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர், பெங்களூருவில் ஆஸ்திரேலிய துணை தூதரகம் அமைய இருப்பதாக அறிவித்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தியாவில் தூதரகம் அமைக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளையும், தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களையும் பார்வையிட ஆஸ்திரேலியா பிரதமருக்கு அழைப்பு விடுத்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
பின்னர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸும் புகழ்பெற்ற ஓபரா இல்லம் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.