தூத்துக்குடியில் 6-வது முறையாக கனிமொழி எம்.பி. வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார். தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி, முள்ளக்காடு, சவேரியார் புரம், அத்திமரப்பட்டி விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் தனது பிரசார வாகனத்தில் முத்தையாபுரம் பகுதிக்கு புறப்பட்டார். அப்போது, முத்தையாபுரம் காவல் நிலையம் அருகே வந்தபோது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில் கனிமொழி எம்.பி.யின் வாகனத்தை நிறுத்தினர். உடனடியாக கனிமொழி எம்.பி. வாகனத்தை விட்டு கீழே இறங்கி நின்றார்.
தொடர்ந்து பறக்கும் படையினர் வாகனத்தில் சோதனை செய்தனர். ஆனால் இதில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. பின்னர் வாகனத்தை அதிகாரிகள் விடுத்தனர். தொடர்ந்து அவர் மற்ற பகுதிகளுக்கு பிரசாரம் செய்ய சென்றார். ஏற்கனவே கனிமொழி எம்.பி. வாகனத்தில் 5 முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் 6-வது முறையாக சோதனை நடந்தது குறிப்பிடத் தக்கது.