நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டதால் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகி அந்த பெருவெள்ளம் பெருக்கெடுத்ததால் மிகப்பெரும் சேதம் விளைந்துள்ளது. இந்த பேரிடரில் இருந்து நாடு இன்னும் மீள்வதற்குள் மற்றொரு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
அதாவது சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் புதிய ஏரி உருவாகியுள்ளது. இவ்விரு ஆறுகளும் திபெத்தில் உருவாகி நேபாளத்தில் பாய்ந்து, போடே கோஷி நதியின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. இந்த ஏரியில் நேற்று காலை வரை 20 லட்சம் கன மீட்டர் நீர் இருப்பதாகவும் இது அடுத்த 3 நாட்களில் 50 லட்சம் கன மீட்டராக உயரக்கூடும் எனவும் சீன அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வெள்ளம் பெருக்கெடுத்தால் மற்றுமொரு பேரிடர் நிகழும் வாய்ப்பு இருப்பதாக நேபாள அரசுக்கு சீனா தெரிவித்து உள்ளது. இதை அந்த நாட்டு நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய எச்சரிக்கை கரையோர மக்களுக்கு மீண்டும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
















