பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் இல.சுந்தரம் உவகையுடன் தெரிவிப்பு!
” கனடாவில் எதிர்வரும் 19ம் மற்றும் 20 திகதிகளில் வார இறுதி விடுதலைதினங்களில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பெற்றுள்ளன. மாநாட்டில் பங்குபற்றும் வகையில் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிலுருந்து பங்குபற்றும் பேச்சாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கனடா வந்து சேர்ந்துள்ளனர். இவ்வாறான நிலையில் எமது மாநாட்டுக் குழுவிற்கு இந்த ஆண்டு பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து நிதி அன்பளிப்புக்கள் கிடைத்துள்ளன. எனினும் நாம் மாநாட்டுக்கு பார்வையாளர்களாக வந்து கலந்த கொள்ளவுள்ள அனைவருக்கும் உணவு மற்றும் சிற்றூண்டிகள் என அனைத்து வசதிகளை செய்துள்ளோம்..
மறுபக்கத்தில் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் எமது மொழியின் பெருமையையும் தொன்மையையும் பறை சாற்றும் பல நிகழ்ச்சிகள் மாநாட்டில் இணைக்கப்பட்டுள்ளன. நாம் இம்முறை இளைய தலைமுறை மாணவர்களையும் இணைத்துக் கொண்டு ‘ உலக தொல்காப்பிய மாநாடு-2026’ ஐ நடத்துகின்றோம். அவர்களின் தேடல், மற்றும் ஆற்றல் அறிவு போன்றவற்றை நேரில் காண கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்”
இவ்வாறு சில மணி நேரத்திற்கு முன்பாக கனடா ஸ்காபுறோ நகரில் குயின் பிளேஸ் மண்டபத்தில் நடைபெற்ற உலக தொல்காப்பிய மாநாடு-2026 தொடர்டபான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் இல.சுந்தரம் உவகையுடன் தெரிவித்தார்.
கனடா- தொல்காப்பிய மன்றத்தின் தலைவி திருமதி செல்வநாயகி ஶ்ரீதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மன்றத்தின் முக்கிய உ றுப்பினர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்குகொண்டனர்.
மன்றத்தின் செயலாளர் சுகந்தன் வல்லிபுரம் மற்றும் அனைவரும் மாநாட்டின் வெற்றிக்காக தீவிரமான கடந்த சில மாதங்களாக உழைத்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது




















