தொழில்நுட்ப தலைமையே எதிர்கால போர்களில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு தேவையான ஆயுதங்களை தயாரித்து, சோதனை செய்து வருகிறது. இந்நிலையில், டில்லியில் டிஆர்டிஓ சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது, 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்பது வெறும் பொருளாதார ரீதியாக வலுவான இந்தியாவை உருவாக்குவது மட்டுமல்ல. தொழில்நுட்பத்தில் தன்னிறைவு, சமூக ரீதியில் அனைவரையும் உள்ளடக்குதல், நிலையான சுற்றுச்சூழல், யுக்தி ரீதியில் பாதுகப்பான இந்தியாவை உருவாக்குவதாகும். தொழில்நுட்ப தலைமையே எதிர்கால போர்களில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும். 2047ம் ஆண்டுக்குள் தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான ஆயுத ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்க வேண்டும். உலகில் ஆயுத விற்பனையில் இந்தியா வலிமையான இடத்தை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
















