மன்னார் நிருபர்
(2-02-2022)
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது எனவும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் அலரி மாளிகையில் இன்று (02) பிற்பகல் சந்தித்த போதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது இலங்கை தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பிரதமருக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்களை உள்ளடக்கிய தொழில் வல்லுநர்கள் சங்கத்தில் 32 தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்தி 52 தொழிற்சங்கங்கள் காணப்படுவதுடன், அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் நிபுணர்களின் உதவியை பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக விருப்பதாக இலங்கை தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் துலித் பெரேரா அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
அமைச்சுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாம் மற்றும் அபிவிருத்திக்காக செயற்படுமாறு கேட்டுக்கொண்ட கௌரவ பிரதமர், நிபுணர்களாக நாட்டிற்காக மேற்கொண்ட உதவிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலத்திற்காக ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒத்துழைப்பை தொழில் வல்லுநர்கள் சங்கத்திற்கும் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் மேலதிக் செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, பிரதமரின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் அனுராதா ஹேரத், இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் துலித் பெரேரா, ருச்சிரா குணசேகர, உபாலி ஜயவர்தன, பந்துல பத்மசிறி, சாந்த செனரத், எச்.பீ.ஆர்.கே.ரூபசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.