டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகிறன்றன. இந்த வழக்கில் டில்லி துணை முதல் அமைச்சராக இருந்த மனிஷ் சிசோடியா, எம்.பி சஞ்சய் சிங், டில்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தற்போது கைதாகி சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.
இந்த நிலையில், டில்லி எம்.பி சஞ்சய் சிங், தனக்கு ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் அளிக்க அமலாக்கத்துறை ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, சஞ்சய் சிங்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது. மேலும், இந்த உத்தரவை வேறு வழக்குக்கு முன் உதாரணமாக கொள்ளக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. டில்லி எம்.பி. சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபர் 4 -ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றக் காவலில் ,டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் சிங்கிற்கு 6 மாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கால கட்டத்தில் சஞ்சய் சிங் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வர உள்ளது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.