சென்னையில் இருந்து நேற்று இரவு தேனி மாவட்டம் கம்பம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் 34 பேர் பயணித்தனர்.
பேருந்து அதிகாலை 5.30 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி பால்பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் லோடு ஏற்றிச்சென்ற லோரி மீது ஆம்னி பேருந்து அதிவேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் சந்திரன், பழனியம்மாள் என்ற பயணி என மொத்தம் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 பயணிகள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை படுகாயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக பாரம் காரணமாக லோரி மெதுவாக சென்றபோது அதிவேகமாக வந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லோரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.