குரு ரேணுகா விக்னேஸ்வரனின் மாணவி சுவேதாவின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை மெருகூட்டும் வண்ணம் தங்களை அர்ப்பணித்த பக்கவாத்தியக் கலைஞர்கள்

கடந்த 22-08-2026 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற ‘கலையருவி நுண்கலைக் கூடத்தின்’ குரு ரேணுகா விக்னேஸ்வரனின் மாணவியும் அரங்கேற்றச் செல்வியுமான சுவேதா கண்ணன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் விறுவிறுப்பாகவும் கச்சிதமாகவும் தொடர்ச்சியாக இடம்பெற்றதை நடன ஆசிரியைகள் மற்றும் கலா ரசிகர்கள் நன்கு உணர்ந்து ரசித்தார்கள் என்று கூறலாம்.
அன்றைய அரங்கேற்றத்தை மெருகூட்டும் வண்ணம் தங்களை அர்ப்பணித்த பக்கவாத்தியக் கலைஞர்களோடு இணைந்து குரு ரேணுகா அவர்களும் தனது முழுதான அர்ப்பணிப்பையும் வழங்கி பக்க வாத்தியக் கலைஞர்ளோடு இசைவாகப் பயணித்தும் அரங்கேற்றச் செல்விக்கு உற்சாகத்தை வழங்கியும் தங்கள் பங்களிப்பை பூரணமாக வழங்கியதன் மூலம் சுவேதா கண்ணன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று வரை ‘பேசப்படும்’ ஒரு பரதநாட்டிய அரங்கேற்றமாகத் திகழ்கின்றது என்பதை உறுதியாகக் கூறலாம்.

அன்றை மிருதங்க வித்துவான் ரதிரூபன் பரஞ்சோதி, பாடகர் அருண் கோபிநாத் மற்றும் வயலின் கலைஞர் ஜெயதேவன் நாயர் ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்கிய விதம் அவர்கள் சுவேதா கண்ணனின் ஒத்திகை நாட்களில் மிகுந்த கவனிப்புடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டியது.
அன்றை அரங்கேற்றத்திற்கு பிரதம விருந்தினராக இன்னிசை வேந்தர் பொன். சுந்தரலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஜெயராணி சிவபாலன் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தமை அரங்கேற்றத்தை அடுத்த படிக்கு அழைத்துச் சென்றது போன்ற உணர்வை அனைவருக்கும் தந்தது என்றால் அது மிகையாகாது

















