தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான “அறிவகத்தில்” பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் சிவஞானம் அவர்கள் தலைமையில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் தியாகத்தின் உச்சத்தைத் தொட்ட ஒப்பற்ற தியாகியாக, ஒரு துளி நீர்கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து தனது இன்னுயிரை மெல்ல மெல்லக் கரைத்து, தமிழினத்தின் விடுதலைக்காக அவர் தந்த இந்த ஆகுதி, தமிழினத்தின் தியாக வரலாற்றில் என்றும் அழியாத சுடராக மிளிர்கிறது.
அறவழியில் தனது உடலையே ஆயுதமாக்கி அவர் காட்டிய இந்த ஒப்பற்ற தியாகம், ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் உரிமைத் தாகத்தையும் தாய்நிலப் பற்றையும் என்றென்றும் விழித்திருக்கச் செய்யும் தியாகத் தீபமாக விளங்குகிறது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி சுப்பிரமணியன் சுரேன், பிரதேச சபைகளின் உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.















