இலங்கையின் வட மாகாணத்தை புரெவி புயல் புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் 402மி.மீ மழை பெய்துள்ளது. கிளிநொச்சி அக்கிராயன்குளம் பகுதியில் 280மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.
கடந்த மூன்று தசாப்த்தங்களில் இல்லாத வகையில் அங்கு ஏராளமான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்று அங்கு சென்று வந்த உள்ளூர் செய்தியாளர் சண்முகம் தவசீலன் கூறுகிறார்.
“இந்த இரண்டு மாவட்டங்களில் அநேகமான பகுதிகள் வெள்ளக்கடாடாகக் காட்சியளிக்கின்றன. தைப் பொங்கலையொட்டி அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிற்கள் நீரில் முற்றாக மூழ்கியுள்ளன. குளங்கள் முற்றாக நிரம்பி ஆபத்தான நிலையில் உள்ளன“.
பல குளங்களின் வான்கதவுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திறக்கப்பட்டன. துணுக்காய், மாந்தைக் கிழக்கு போன்ற பகுதிகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.